அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள கருத்து

இலங்கை விவகாரத்தில் இந்தியா-டெல்லியினை மீறி ஜோ பைடன் முடிவுகளை எடுக்கக்கூடியவரல்ல என கருத்து தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஆட்சி மாற்றங்களை கடந்து, உலக, புவிசார் அரசியல்ரீதியாக சிந்தித்தே நமது உரிமைகளை நாம் வென்றடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் தொடர்பில் தமிழக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இக்கருத்தினை வெளியிட்ட பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்,
2009ம் ஆண்டு தமிழினப்படுகொலை நடைபெற்றிருந்தவேளை ஜோ பைடன் அவர்கள் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தவர். அவருக்கு எங்களது பிரச்சனைகள் ஓரளவுக்கு தெரியும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம்.

அதேசமயம் ஜோ பைடனை பொறுத்தவரை தனது நடவடிக்கைகளை தனியாக முன்னெடுப்பவரல்ல பிராந்திய நாடுகளோடு சேர்ந்து முடிவுகளை எடுப்பதுதான அவரது அரசியல் நிலைப்பாடு.

தென்னாசியா, ஐரோப்பா எதுவானாலும் அவர் தனியாக செயற்பாடுகளை செய்வதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. மற்ற நாடுகளுடன் சேர்ந்து கூட்டுமுடிவுகளை எடுப்பதில்தான் அவருடைய அரசியல் நிலைப்பாடு இருக்கின்றது.

எனவே எங்களுடைய பிரச்சனையினை எடுக்கும் போது, அவருக்கு எங்களுடைய பிரச்சனைகள் தெரிந்திருந்தாலும், இந்தியாவுடன் சேர்ந்துதான் முடிவுகளை எடுக்க முனைவார். இந்தியா-டெல்லியை மீறி அவர் முடிவுகளை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

எம்மைப் பொறுத்தவரையில் டொனால்ட் ரம்ப் நல்லவரா, ஜோ பைடன் நல்லவரா என்று பார்த்துக் கொண்டிருக்கேலாது. அவர்களுடைய விருப்பத்திலேயோ அல்லது அனுதாபத்திலேயே எமது உரிமைகயோ வென்றெடுக்கவோ, தனிநாட்டையோ அமைக்கப் போவதில்லை.

யார் அதிபராக வந்தாலும், (இந்தியா) டெல்லிக்கு கூட, தமிழர்களின் சுதந்திரம் , இருப்பு அவர்களது நலன்களுக்கு தேவை என்ற நிலையினை நாம் உருவாக்க வேண்டும். ஆட்சி மாற்றங்களை பற்றியதல்ல நமது கவனம். புவிசார் அரசியல்ரீதியாக , உலக அரசியல்ரீதியாக சிந்தித்து அதற்க ஏற்ப எம்மை தயார்படுத்தி செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.