நீதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்கள் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும்

ஜோர்ஜ் ஃப்ளாய்ட் இறப்புக்கு நீதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்கள் அமெரிக்காவில் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இனவெறிக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டங்கள் குறித்து கடந்த புதன்கிழமை அன்று தனது கருத்தைஒபாமாவெளியிட்டிருந்தார்.

”நீங்கள் முக்கியமானவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் வாழ்க்கை முக்கியமானது.

உங்கள் கனவுகள் முக்கியமானவை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களை அறிகிறேன். அமெரிக்கா அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும்,பெரும் மாற்றத்தைக் கோரும் வரலாற்று நிகழ்வுகள் கடந்த வாரம் நம் நாட்டில் அரங்கேறின. மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் தாக்கம் செலுத்த வேண்டும். நகர மேயர்களும் அதிகாரங்கள் தொடர்பான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்”.

இவ்வாறு ஒபாமா பேசினார்.

இந்தப் போராட்டத்தை ட்ரம்ப் கையாளும் விதம் குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த திங்கள்கிழமை அன்று போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன் கோபத்தை ஒபாமா வெளிப்படுத்தினார்.