இலங்கையில் சீன உளவு கப்பல் அனுமதிக்கப்படுவதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! இலங்கை சென்ற அவுஸ்திரேலிய ரோந்து கப்பல் பற்றி தெரியுமா?

வரும் ஓகஸ்ட் 16ஆம் திகதி சீனாவின் ‘யுவான் வாங் 5’ உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இலங்கை வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுகிறது.

அதே சமயம், அவுஸ்திரேலிய ரோந்து கப்பல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆம், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓசன் ஷீல்ட் எனும் அவுஸ்திரேலியாவின் ரோந்து கப்பல் இலங்கைக்கு வந்திருக்கிறது.

இந்த கப்பலோடு அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 46 இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். வழக்கமாக விமானம் வழியாக இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்ட வந்த நிலையில், முதல் முறையாக கப்பல் வழியாக நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

இதன் மூலம், இதுவரை அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.

“ஏன் அவர்களை(தஞ்சக்கோரிக்கையாளர்களை) கடல் வழியாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் அழைத்து வந்தனர் எனத் தெரியவில்லை. ஆனால், சட்டவிரோதமான வழிகளில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயல்பவர்களை எச்சரிக்கும் விதமாக இதை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்,” என இலங்கை கடற்படையின் பேச்சாளர் இண்டிகா டி சில்வா கூறியுள்ளார்.