பூமி வெப்பமாதலை தடுப்பதில் உலக நாடுகள் அக்கறை செலுத்தவில்லை – ஐ.நா

பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 பாகை செல்சியசிற்குள் பேணுவது என்ற திட்டத்திற்கு உலகின் முன்னனி நாடுகள் ஒத்துழைப்பை வழங்கவில்லை இது எதிர்காலத்தில் மிகப்பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தும் என கடந்த புதன்கிழமை (26) வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 என்ற மாநாடு ஆரம்பிப்பதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற மாநாட்டில் சூழல் மாசடைவதை தடுப்பதற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் போதுமானதல்ல.

உலகின் கவனம் தற்போது வேறு விவகாரங்களில் உள்ளதால் யாரும் காலநிலை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. எனவே உலகம் மீண்டும் அதில் கவனம் செலுத்தவேண்டும் இல்லையெனில் அதனால் ஏற்படும் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐ.நாவின் செயலாளர் நாயகம் அன்ரொனியோ குற்றேரஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அறிக்கையின் அடிப்படையில் 1.5 பாகை வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பது என்பது இயலாத காரியம் எனவே எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1 பாகை வெப்பநிலை அதிகரிப்பையே கட்டுப்படுத்த முடியும். எரிபொருள் பாவனையில்; 45 சதவிகித குறைப்பை மேற்கொண்டாலே 1.5 பாகை வெப்பநிலை அதிகரிப்பை தடுக்க முடியும். தற்போதைய நடவடிக்கையை உலக நாடுகள் தொடர்ந்தால் இந்த நூற்றாண்டுக்குள் வெப்பநிலை 2.8 பாகையால் அதிகரிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.