இலங்கைக்கு மேலதிக உதவியை அறிவித்தது உலக வங்கி!

‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட பாரிய அழிவுகளுக்கு உலக வங்கி குழுமம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதுடன், நாட்டின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அவசரகால நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த அனர்த்தத்தின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய அசாத்தியமான மீள்தன்மைக்கும், உயிர் சேதங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களில் இருந்து நிதியை மீள் ஒதுக்கீடு செய்வதன் மூலம், 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான அவசர உதவியை உலக வங்கி வழங்கவுள்ளது.

இந்த நிதி, சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், நீர் வழங்கல், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க உதவும்.

உலக வங்கியின் தனியார் துறைப் பிரிவான சர்வதேச நிதிக் கழகம் , வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பொருளாதார மீட்சியை முன்னெடுப்பதற்காக விவசாயம், உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். அத்துடன், நிவாரணப் பணிகளுக்கு வழிகாட்ட, அனர்த்த இடர் குறைப்புக்கான உலகளாவிய வசதியுடன் இணைந்து மதிப்பீட்டுப் பணியை உலக வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.