“பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்“-மன்னாரில் பெண்கள் கவனயீர்ப்பு பேரணி

‘நூறு கோடி மக்களின் எழுச்சி – 2023 பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு நேற்று மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பெண்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

மன்னார் பிரதான நகர சுற்று வட்டத்தின் ஊடாக ஊர்வலமாகச் சென்ற பெண்களால் பறை இசை ஒலிக்கப்பட்டு பெண்கள் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன.

மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றை நிறுத்தி உடல் உள ரீதியாக பெண்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம், வன்முறைகளில் இருந்து விடுதலை பெற சமூகங்களுக்காக ஒன்றிணைவோம், முதலாளித்து வத்தின் நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுதலை பெறுவோம் என எழுச்சி கொள் வோம், பூமிக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர எழுச்சி கொள்வோம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அத்துடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட் டன. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னாரிலுள்ள பெண்கள் நலன் சார்ந்த அமைப்பின் தலைவிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.