தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம் – யாழ். மீனவ அமைப்பு எச்சரிக்கை

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (19) யாழில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில்,
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ். மாவட்ட மீனவ மக்கள் சார்பில் நன்றியை கூறிக்கொள்வதோடு சில விடயங்களை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.

கச்சத்தீவு இலங்கையின் சொத்து. முறைப்படி இலங்கை அதனை பெற்றுக்கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற்றொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறான நிலையில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் இடம்பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

தாங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சத்தீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை  பேசுவதை நாங்கள் விரும்பவில்லை.

நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்கள். ஆயின் யாழ். மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பினை காட்டுவதற்கு தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது மீனவர்களின் பல கோடி பெறுமதியான  வலைகளையும் நாசம் செய்துவிட்டார்கள்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் தடைக்காலம் நிறைவடைவதாக அறிகிறோம்.

ஆகவே, எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி  உள்நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.