அவுஸ்ரேலியா எதிர்காலத்தில் அமெரிக்க அணு ஆயுதங்களைத் தன்வசம் வைத்திருக்கக்கூடும் என ரஷ்யப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் செர்ஜி ஷோய்கு எச்சரித்துள்ளார். ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான இடங்களாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும் வாஷிங்டன் கருத்தில் கொண்டுள்ளதாக அவர் புதன்கிழமை(27) நடைபெற்ற ரஷ்யா-ஆசியான் கூட்டத்தில் தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவம், அடுத்த மாத தொடக்கத்திலேயே தென்மேற்கு ஜப்பானில் நடைபெறும் வாலியன்ட் ஷீல்ட் மற்றும் ஓரியன்ட் ஷீல்ட் கூட்டுப் பயிற்சிகளுக்காக டைஃபான் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தக்கூடும். இந்த அமைப்புகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட டோமஹாக் ஏவுகணைகளைச் செலுத்துவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மாஸ்கோவில் உள்ள ஜப்பானியத் தூதரகம், பயிற்சிகளுக்குப் பிறகு டைஃபான் அமைப்பு ஜப்பானில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தில் “சேமிக்கப்படும்” என்றும், இது “நிரந்தர நிலைநிறுத்தம்” ஆகாது என்றும் கூறியுள்ளது.
“ஜப்பானும் கொரியக் குடியரசும் தங்கள் மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்களைத் தன்வசம் வைத்திருக்கத் தயாராகி வருகின்றன,” என்று ரஷ்யா-ஆசியான் பாதுகாப்புக் கூட்டத்தில் ஷோய்கு கூறினார். “அவுஸ்ரேலியாவின் AUKUS கூட்டாண்மையில் பங்கேற்பதன் காரணமாக, அத்தகைய ஆயுதங்கள் அதன் மண்ணிலும் வந்து சேரக்கூடும்.”
கான்பெரா 2021-ல் அமெரிக்கா மற்றும் இங்கி லாந்துடன் AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், வர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து இயக்குவதற்குத் தேவையான அணுசக்தி தொழில்நுட்பத்தை அவுஸ்ரேலிய கடற் படைக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாங்கள் வாங்குவது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறவில்லை என்று அவுஸ்ரேலிய நீர்மூழ்கிக் கப்பல் முகாமை வாதிடுகிறது.



