மோடிக்கான மலையகத் தமிழர் அபிலாஷை ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு

அபிலாஷை ஆவணம் இந்தியத் தூதுவரிடம்

மலையகத் தமிழர் அபிலாஷை ஆவணம் இந்தியத் தூதுவரிடம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாஷை ஆவணக் கடிதத்தை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இன்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது.

கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்தியத் தரப்பில் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ்  ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது:-

மனம் திறந்த கலந்துரையாடலுடன் இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது.இலங்கையில் வாழும் தமிழர் ஜனத்தொகையில் சுமார் சரிபாதியான இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், இலங்கையின் முழுமைமிக்க குடிமக்களாக ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையகத் தமிழ் இலங்கையர் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தருகின்றது என அவர் மேலும் கூறினார்.

மலையகத் தமிழ் மக்களின் அனைத்து அபிலாஷைகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் கோரிக்கைகள் உள்ளடங்கிய இத்தகையை ஆவணத்தைத் தயாரித்து முன்வைத்துள்ளமை தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குத் தனது மகிழ்ச்சிகளையும், பாராட்டுகளையும் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்த அபிலாஷை ஆவணக் கடிதத்தை உடனடியாக பாரதப் பிரதமர்  நரேந்திர மோடியின் அவதானத்துக்கு முறைப்படி அனுப்பி வைப்பதாக தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவுக்கு  உறுதியளித்தார்.

மேலும், இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில்  இந்திய தூதகரம் வழங்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.   அடுத்த வாரம் இலங்கை வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சந்திக்கும்போது இது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும். பிம்ஸ்டெக் மாநாடு முடிந்த உடன், இந்த ஆவண கோரிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாட விரும்புவதாகவும்  தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கூறியதாவது, “இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் இலங்கையர் தொழிலாளர்களாக, இலங்கை தீவுக்கு முதன்முதலில் 1823ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டனர். நிதி வர்த்தகம் உட்பட ஏனைய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் மென்மேலும் தமிழர்கள் அதன் பின் இலங்கை வந்தனர்.

அடுத்த ஆண்டு 2023 உடன் இந்த வரலாறு, இருநூறு ஆண்டுகளை தொடுகிறது. அதை நாம்  விரிவாக நினைவு கூற உள்ளோம்.இந்த இருநூறு ஆண்டுகளில் ஒரு சமூகமாக நாம் பெற்றுள்ள வளர்ச்சி, பெறாத வளர்ச்சி, முகம் கொடுக்கின்ற இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆவன செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதன் ஆரம்பமே இந்த ஆவணமாகும்.

1823ஆம் ஆண்டு வேளையில் இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் ஆண்ட பிரித்தானிய அரசின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டுவர உள்ளோம்.  பிரித்தானிய அரசுக்கும் எமது மக்கள் தொடர்பில் கடப்பாடு இருக்கின்றது.  1823ஆம் ஆண்டுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான்  1815ல்  கண்டி ராஜ்யத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மதுரை நாயக்க மன்னர் வம்சத்தின் சுமார் 300 ஆண்டுகால ஆட்சி, பிரித்தானியரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நாட்டில் உழைக்க மட்டுமல்ல ஆளவும் நாம் வந்துள்ளோம் என்பதை இது காட்டுகின்றது.இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களுடன் நாம் பிரிக்க முடியாத நல்லுறவு கொண்டுள்ளோம். அவர்களின் இன்னல்களைத் துடைக்க இந்தியா பலதும் செய்கின்றது. அது தொடர வேண்டும்.

அதேவேளை, அதே அக்கறையை எமது மக்கள் மீதும் இந்திய உட்பட உலகம் காட்ட வேண்டிய வேளை இன்று வந்து விட்டது.   சுமார் பதினைந்து இலட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையரில் பத்து விகிதமே தோட்ட தொழிலாளர்கள் ஆவர். ஒட்டுமொத்த மலையகத் தமிழ் இலங்கையரும் தோட்ட தொழிலாளர்கள் அல்லர்  என்பதையும், எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் இந்திய உட்பட உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, பத்து விகிதமான சுமார் ஒன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் தோட்டங்களில் இன்னமும் வாழ்பவர்கள் உள்ளிட்ட சுமார் நான்கு இலட்சம் மக்களே இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவினர்.

அவர்களைக் கைத்தூக்கி தேசிய மட்டத்துக்கு உயர்த்த இந்தியா, பிரிட்டன் உட்பட உலகத்துக்கு கடப்பாடு இருக்கின்றது.இதை வலியுறுத்தி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. எமது உறுதிப்பாட்டை நாம் எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்து செய்து முடிப்போம்” – என்றார்.

Tamil News