முல்லைத்தீவிலும் தொடரும் சீரற்ற காலநிலை – தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் முல்லைத்தீவு மாவட்டத்திலும்  பல தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மாவட்ட செயலகத்தில் இதுவரை எந்த பாதிப்புக்களும் பதிவாகாத நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதோடு தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெரும்பாலான வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நந்திக்கடலை அண்மித்த சுமார் 200 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு நீர்வரத்து அதிகரித்ததன்  காரணமாக நந்திக்கடல் தொடுவாய் இயற்கையாகவே உடைப்பெடுத்துள்ளது.

தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

இதனை விடவும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் உடையார்கட்டு, சுதந்திரபுரம், விசுவமடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதுடன் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் வெள்ள நீர்வடிந்தோட முடியாத நிலையில் வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகால்கள் காணப்படுகின்றன.

ஆனந்தபுரம் மற்றும் வேணாவில் பகுதிகளில்  வெள்ளம் புகுந்து கொண்டதால் 25 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழைநீர் செல்லமுடியாத இடங்களில் வடிகால் அமைப்பினை சீர்செய்யும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்

மேலும் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் திருமுறிகண்டி இந்துபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad முல்லைத்தீவிலும் தொடரும் சீரற்ற காலநிலை - தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்