உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முழுமையான விசாரணைத் தரவுகளை தற்போதைய இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதா? என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று தாக்குதல்கள் நடத்தப்பட்ட குறுகிய காலப்பகுதிக்குள், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைக் கோரியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நினைவூட்டியுள்ளது.
இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்குச் சில தொழில்நுட்ப நிபுணத்துவம் பற்றாக்குறையாக இருந்தமையினாலேயே இந்த உதவி கோரப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு உறுதி அளிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) முகவர்கள், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இராணுவப் புலனாய்வுத் துறை மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணைகளின் முடிவுகளை எப்.பி.ஐ பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், உள்ளூர் அதிகாரிகளாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணைகளின் அடிப்படையில் 2020 நவம்பர் 12 அன்று எப்.பி.ஐ விசேட முகவரால் அமெரிக்க நீதிமன்றத்தில் விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2020 டிசம்பரில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், இலங்கையில் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.



