எத்தியோப்பிய அரசுப் படைக்கும், டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்தியில் நடக்கும் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன கூட்டாக நடத்திய விசாரணையின் அறிக்கையில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக்ரே பிராந்தியத்தில் போர் குற்றங்கள் நடந்துள்ளதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
2020 நவம்பரில் டீக்ரே தனி நாடு கேட்கும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது உத்தரவிட்டபின் இருதரப்பு மோதல் தொடங்கியது.
இந்நிலையில், இந்த வாரம் எத்தியோப்பியாவில் அவசரநிலை அமலாக்கப்பட்டது.
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் திகதி ஒரு இராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது.
ஆனால், அந்த இராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி. இதனிடையே டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக எத்தியோப்பியா அறிவித்தது. ஆனால், சண்டை தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.