இனி மாஸ்க்  தேவையில்லை – அதிபர் ட்ரம்பின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் அந்நாட்டு இராணுவ மருத்துவமனையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ட்ரம்ப்,  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார்.

வெள்ளை மாளிகையின் பால்கனிக்கு வந்த டிரம்ப்,  அப்போது, மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் ட்ரம்ப் வைத்துக்கொண்டார். மேலும், கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் வகையில், தொற்று பாதித்த ட்ரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது  சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரம் அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை  காவு வாங்கியுள்ள கொரோனாவை ட்ரம்ப்  குறைத்து மதிப்பிடுவது விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.