உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், தங்களின் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சட்டப்பூர்வ வழிகளின் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
“அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான காரணங்களை நீதிமன்றமே விளக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி தொடர் உண்ணாவிரதமாகத் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த இயக்கம் உண்மைகளின் அடிப்படையில் அமையாததால் தற்போது சிதறடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
“தாங்கள் கூறுவது பொய் என்பது அவர்களுக்கே தெரியும். அதனால்தான் அவர்களால் இந்த இயக்கத்தை ஒரே மாதிரியாகத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாமல், தற்போது பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறார்கள்,” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் முறையாக முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் உட்பட பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட ஒரு சிறிய குழுவினர், தற்போதைய விசாரணைச் செயல்முறைகளின் போது சுரேஷ் சலேவுக்கு நீதி கோருவதாகக் கூறி பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டினார்.
நீதிமன்றச் செயல்முறைகளுக்கு இடையூறு விளைவித்த பல நபர்களுக்கு எதிராக ‘நீதிமன்ற அவமதிப்பு’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கனவே நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை மற்றும் தாக்குதல்கள் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.



