நாட்டில் உள்ள சிறைச்சாலை அமைப்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலை உருவெடுத்துள்ளது. நபர்களைக் கைது செய்யும்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகளில் மோதல் நிலைமை உருவாகிறது என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தேகம நீதிமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (3) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் காணப்படும் அளவுக்கு அதிகமான கைதிகளின் நெருக்கடியே தற்போதைய அசம்பாவிதங்களுக்கு முதன்மைக் காரணியாக அமைகிறது. கடந்த காலங்களில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். அரசாங்கம் இதற்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், ஏனைய சிறைச்சாலைகளிலும் இவ்வாறான கலவரங்கள் வெடித்து பெருஞ்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நபர்களைக் கைது செய்யும்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்படும் நிலை உருவாகின்றது. இதனால் அரசாங்கத்தின் பணம் வீணவிரையமாவதுடன் கைதிகளுக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது.
எனவே, இந்த உண்மையான பிரச்சினையை உணர்ந்து ஆட்சியாளர்கள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதை விடுத்து, இச்சம்பவங்களை அரசாங்கத்துக்கு எதிரான சதி என்றோ அல்லது அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் முயற்சி என்றோ தவறான வியாக்கியானங்களைக் கூறி உண்மையான பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடக் கூடாது.
தேவையான ஊழியர்களை நியமித்து அறிக்கைகளை விரைவுபடுத்துவதுடன், அனைத்துத் தளங்களிலும் ஆராய்ந்து அரசாங்கம் இதற்கான முறையான தீர்வினை விரைந்து வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



