பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த  வெள்ளிக்கிழமை (டிச. 9) அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற குறுந்தகவல் ஒன்றில், நாளை செவ்வாய்க்கிழமை (டிச.13)  சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்துக்கான அழைப்பு ஒன்று கிடைத்ததாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

இதுவரை எழுத்து மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு பல தடவைகள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இந்த பேச்சுவார்த்தை தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக குறித்த அறிவித்தலில் இருக்கவில்லை.

ஜனாதிபதி பல தடவைகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இது தவிர அது ஆக்கபூர்வமாக  இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்காக மட்டும் நடைபெறும் பேச்சுவார்த்தையாக இது வரை அறிவிக்கவில்லை.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வியடைந்தன. நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தையிலும் தமிழ் மக்களே ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையில் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஏன் என்றால் இன்றைக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் சாதாரண சந்தர்ப்பம் இல்லை.

இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் போன்ற தரப்புக்கள் நாங்கள் கூறிய அணுகுமுறையை கடைப்பிடித்து இருந்தால் இந்த அரசாங்கத்துக்கு உண்மைத்தன்மையிலே சிங்கள மக்களிடம் பேச முடியாத நிலை உருவாகும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய அனைத்து தரப்புக்களும் நிபந்தனை இல்லாமல் சமஷ்டி சமஷ்டி என்று மக்களுக்கு ஒரு முகத்தை காட்டிக் கொண்டு ஒரு நிபந்தனையும் போடாமல் விடப்போகின்றார். அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான அங்கீகாரத்தை கொடுத்து விடுவதாகத் தான் இருக்கும்.

ஆகவே மக்கள் அனைத்தையும் விளங்கிக் கொண்டு எங்களுடைய அணுகுமுறை மட்டும் தான் இந்த அரசாங்கத்தையும் சிங்கள தேசத்தை இந்த நேரத்திலாவது, தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஒரு ஆக்கப்பூர்வமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கும் என்ற விடயத்தையும் கூறி, இதை நாங்கள் நழுவ விட்டால், தமிழ் மக்கள் உடைய இனப்பிரச்சினை என்ற எல்லையை தாண்டி எட்டமுடியாத இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆபத்துக்கள் இருக்கின்றது. அதுக்கு முழு பொறுப்பும் இந்த பேச்சுவார்தையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நடந்து கொண்ட தரப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.