இன்று நாடாளுமன்றில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அன்று 19 ஐ ஆதரித்தவர்கள்

215 உறுப்பினர்களின் விருப்பத்துடனேயே 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, அது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்பானது ,தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானவர்கள் 19 ஆவது திருத்தத்திற்கு இணங்கியவர்கள் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவம் வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட மறுசீரமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்றும் கரு ஜயசூரிய அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானவர்கள் 19 ஆவது திருத்தத்திற்கு இணங்கியவர்கள் என்றும் கரு ஜயசூரிய நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் சபாநாயகர் கோரியுள்ளார்.

மாதுலுவாவே சோபித்த தேரர் எதிர்பார்த்ததைப் போன்று பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் ஜனாதிபதியிடமிருக்கும் எல்லையற்ற அதிகாரத்தை குறைக்கவும் சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்து தேவையற்ற அரசியல் தலையீடுகளில் இருந்து விடுவிப்பதையும் இந்தத் திருத்தத்தால் செய்ய முடிந்தது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதானால் அதனை சகலரதும் ஆலோசனைகளைப் பெற்றே செய்ய வேண்டும் என கரு ஜயசூரிய தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.