மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) காலை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் நடைபெறுகின்றது.

லண்டன் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் இராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் செல்வர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்து அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வர்.

இந்த இறுதிச் சடங்குகள் சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும். அதன்பின் ராணியின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இங்குதான் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்தபோது நடந்த அரசு மரியாதையுடன் கூறிய இறுதிச் சடங்கு நிகழ்வுக்குப் பிறகு மிகுந்த உணர்ச்சியும், விமர்சையும், சம்பிரதாயங்களும் நிறைந்த இறுதிச் சடங்காக இது இருக்கும்.

இறுதிச் சடங்கு நிகழ்வில் கூடுதலாக செய்யவேண்டிய திட்டங்கள் சிலதைப் பற்றி ராணியே குறிப்பிட்டுச் சென்றுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மறைந்த ராணியின் இறுதிச்சடங்கை முன்னிட்டு, பிரித்தானிய அரசாங்கம் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. அங்கு பாடசாலைகள், திரையரங்குகள் இன்று செயற்படாது.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று மாலை சந்திக்கிறார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 8ஆம் திகதி தனது 96 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.