ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான காணொலி பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த கலந்துரையாடலின் காணொலி பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வழங்கப்பட்டுள்ள காணொலியில் ஆரம்பக் கலந்துரையாடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளதாகவும், சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கலந்துரையாடல் முழுவதும் இடம்பெற்ற அனைத்து உரையாடல்கள், அவதானிப்புகள் மற்றும் பதில்கள் உட்படச் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் இறுதி கருத்துகளும் அடங்கிய முழுமையான, தொகுக்கப்படாத காணொலி பதிவை வழங்குமாறு அச்சங்கம் கோரியுள்ளது.
மேலும், குறித்த காணொலியை மிகத் தெளிவான ஒலி மற்றும் காட்சித் தரத்துடன் வழங்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சுரானி சமரசேகரவின் கையொப்பத்துடன் இக்கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



