பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்கானதல்ல; அலி சப்ரி


பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் நாட்டின் சட்டங்கள் மற்றும் தனிமனித சுதந்திரத்தைப் பலப்படுத்தும் வகையிலானதே தவிர சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்கானதல்ல என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்கள் சில்லறைத்தனமானவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். எனினும் அவர்களது நல்லாட்சி அரசாங்கத்தில் ஏன் அதனை மேற்கொள்ளவில்லை என நான் கேட்க விரும்புகின்றேன் .பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதல்ல என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எமது அரசாங்கம் 48 வருடங்களுக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசேட குழு அமைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தக் குழுவிடம் ஆலோசனைகளை முன்வைக்கவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் தனியார் சுதந்திரத்தைப் பலப்படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன. ஒருபோதும் அவை சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட விடயமல்ல. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் அனைவரும் ஒரே மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

Tamil News