தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் பிரிந்து போட்டியிடக் கூடாது-மட்டு. தமிழ் உணர்வாளர் அமைப்பு எச்சரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும். எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு செங்கலடியிலுள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று  (ஜன 10) பெற்ற விசேட ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நின்று தேர்தல் களத்தில் குதித்திருப்பது வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தை விரும்புகின்ற அனைவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது.

நாங்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டகருத்தினை கொண்டிருந்த போதிலும்  தமிழ் தேசியத்தை விசுவாசிப்பதன் காரணத்தினால் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்.

இம்முறை நடைபெறுகின்ற இந்த தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நின்று தேர்தல் களத்தில் குதிக்குமாக இருந்தால் நாங்கள் இவர்களுக்கு எதிராக மக்களை திசை திருப்புவோம். யாரும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க கூடாது என இது ஒரு ஆரம்ப பிரிவாக இருந்தால் கூட காலப்போக்கில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் தமிழ் தேசிய நீரோட்டத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த பங்களிப்பும் இல்லாமல் தமிழ் தேசிய பிரச்சினைக்கு இப்போது தீர்வாக அமையாது எனவே வடக்கு கிழக்கு தமிழர்களின் நன்மைகருதி அதற்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கின்றது.

2004 ம் ஆண்டு காலப்பகுதில் கூட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அடித்தளமிடப்பட்டது கிழக்கில் இருந்துதான் எனவே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக்குறியாக்கும்.

அதனைவிட கிழக்கிலே இருக்கின்ற சில தமிழ் உதிரி கட்சிகளுக்கு இது வாய்ப்பாக அமைந்திவிடக் கூடிய சூழல் அமையும் எனவே தமிழ் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இதனை மறுத்து தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் உணர்வாளர் அமைப்பு இவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் எனவே அவசரமாகவும் அவசியமாகவும் தமிழ் தேசிய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் முடிவை எடுக்க வேண்டியது எங்களது நிலைப்பாடு என்றார்.