மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது மகன் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து வந்த தமிழ் குடும்பமே இந்த இழப்பை சந்தித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவில் ஏதிலிகளாக தஞ்சமம் அடைந்துள்ள குறித்த தமிழ் குடும்பத்தின் மகன் ரீத்திஸ் கிருஸ்ணநீதனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். என அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் விண்ணப்பங்களை வேண்டுமென்றே பரிசீலிப்பதை உள்துறை அமைச்சு தாமதித்துள்ளது, அவர்கள் குடிவரவு விசாரணைகளை பூர்த்தி செய்துள்ள போதிலும் ஆவணங்களை ஆராய்வது தாமதமாக்கப் பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த குடும்பம் இலங்கையிலிருந்து 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.