ஓமான் நாட்டில் சிக்கி தவிக்கும் மலையக பணிப் பெண்கள்

ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நிர்க்கதி நிலையிலிருக்கும் மலையகம் மற்றும் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் நேற்று (22) வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  கலந்துரையாடியுள்ளார்.

ஓமானுக்கு இலங்கையிலிருந்து சுற்றுலா வீசா மூலம் பணிப்பெண்களாக அழைத்து செல்லப்பட்டு தற்போது நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் தங்கியிருக்கும் மலையகம் உட்பட்ட ஏனைய பிரதேச பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இ.தொ.கா இக்கலந்துரையாடலில் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளது.

ஓமானில் வீசா இன்றி தங்கியிருக்கும் பணிப்பெண்களிடம் நாளாந்தம் 05 திர்ஹாம் அபராதமாக அறவிடப்படுகிறது. அத்துடன் இலங்கையிலிருந்து ஓமானுக்கு பணிப்பெண்களாக சேவைக்கு அமர்த்த செலவு செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் வழங்கிவிட்டு பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு அந்நாடு அறிவித்துள்ளது. இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் இணைந்து ஓமானில் சிக்கியுள்ள பணிப் பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதாக இ.தொ.கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பணிப் பெண்களை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் இருந்து தூதுக்குழு அந்நாட்டிற்கு சென்று அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இ.தொ.கா மேலும் தெரிவித்துள்ளது.