01. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எச்சரித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
J.R.ஜயவர்தனவின் அடக்குமுறைப் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கக் கூடாது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக நாட்டில் மீண்டும் ஒரு கொடூரமான சூழல் உருவாகத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வைத்து, கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த கணேஸ் குமார் சங்கீத்சன் என்ற இளம் பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச் சட்டம், கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை மிக மோசமாகப் பாதித்திருந்ததாகக் குறிப்பிட்ட சிறீதரன், இன்று ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பியினரின் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோர் இந்தச் சட்டத்தையே கொடூரமாகப் பயன்படுத்தினர் என்பதை நினைவூட்டினார்.
அதேபோல், தமிழ் இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்தச் சட்டத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.
இதேவேளை, சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையில் முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின்போது, சங்கீத்சன் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதால், சாதாரண நீதிமன்ற நடைமுறையின் கீழ் அவருக்கான பிணை கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறீதரனிடம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோருக்கிடையில் பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த சந்திப்பின்போது, சங்கீத்சனின் சட்டநிலை மற்றும் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமைச்சர் சந்திரசேகர், சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.



