குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், வீட்டுப் பணியாளர்களை அழைப்பது 10 நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், 27 நாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள 10 நாடுகள்:
இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நேபாளம், தென்னாப்பிரிக்கா, பெனின், எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 9 நாடுகளிலிருந்து பெண் மற்றும் ஆண் ஆகிய இருபாலாரையும் அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், செனகல் நாட்டிலிருந்து பணியாளர்களைப் பணியமர்த்துவது ஆண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கென்யா, உகாண்டா, நைஜீரியா, மடகாஸ்கர் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளர்களை அழைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சில நாடுகளிலிருந்து பெண் பணியாளர்களுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆண் பணியாளர்களை அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



