துணை மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராகவும், இலவசக் கல்வியைச் சீரழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (28) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவசக் கல்வியைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த தற்போதைய அரசாங்கம், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் 20 – 25 இலட்சம் ரூபாவை கொடுத்துப் பட்டம் பெற்றவர்களையும், கபொத உயர்தரப் பரீட்சையில் திறமை அடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வாகிப் பட்டம் பெற்றவர்களையும் ஒரே தராசில் நிறுத்திப் பொது அறிவுப் பரீட்சை மூலம் அரச சேவையில் இணைக்க முயல்கிறது.
தொழில் சார்ந்த இப்பாடநெறிக்கு மீண்டும் ஒரு பரீட்சை தேவையில்லை. அரச பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இந்தப் பரீட்சையைப் புறக்கணித்த நிலையில், தனியார் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற சிலருக்கே அரசாங்கம் நியமனங்களை வழங்கத் தயாராகிறது.
மேலும், கொத்தலாவல ஊடாக மருத்துவப் பட்டத்தை பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தல், கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நிதியைக் குறைத்தல் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவைத் தனியார் பட்டக் கடைகளுக்கான முத்திரை குத்தும் நிறுவனமாக மாற்றுதல் என அரசாங்கம் கல்வியை வியாபாரப் பண்டமாக்கி இலவசக் கல்வியைச் சீரழிக்கிறது என்றார்.



