இலங்கை – வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்று (08) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை இலங்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் இத்துறை சார்ந்து கையெழுத்திடப்பட்ட முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவும், வியட்நாம் அரசாங்கத்தின் சார்பாக அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வூ ஹாய் குவானும் (Vu Hai Quan)இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அறிவியல் அறிவு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதற்கமைய, உயிரியல் தொழில்நுட்பம், விவசாயம், மூலிகை மற்றும் உணவு தொழில்நுட்பம், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்கள், இலத்திரனியல், தானியங்கிமயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது:

அத்துடன், கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பரிமாறிக்கொள்ளுதல், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குக் கூட்டு நிதி வழங்குதல் என்பனவும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.