சீனாவின் அடிமையாக இலங்கை மாறிவிட்டது- இரா.சாணக்கியன்

சீனாவின் அடிமையாக இலங்கை

‘சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள்’ என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றிய இரா.சாணக்கியன்,

‘இலங்கை அரசாங்கமானது தனது மோசமான தீர்மானத்தின் ஊடாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு 690 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது. விவசாய அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக சீனாவில் கழிவுப் பொருள்களாக ஒதுக்கப்பட்ட இலங்கையில் விவசாயிகள் பயன்படுத்த முடியாத உரங்களை இறக்குமதி செய்தபோது அதனை இந்த நாட்டில் பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் கட்டளையிட்டதன் பிறகு சீனா இலங்கையில் உள்ள ஒரு வங்கியை தடைசெய்தது.

அதனை தொடர்ந்து 690 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது. இலங்கையின் பணத்தில் 130கோடி ரூபாவுக்கு மேலாக தண்டப்பணமாக சீனாவிற்கு கட்டப்பட்டுள்ளது.

மக்களது வரிப்பணத்தினையெடுத்து வேறு ஒரு நாட்டில் தேவையற்ற செலவினை செய்துவிட்டு இந்த நாட்டு மக்களை மிகவும் மோசமான நிலைக்குதள்ளியுள்ளனர்.

இந்நிலையில், சீனவெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் சீனாவின் அடிமையாக இலங்கை மாறிவிட்டது’ என்றார்.

Tamil News