கனிய மணல் அகழ்வாராய்ச்சி விவகாரம்:காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவு கேள்வி

எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கைக்கு அகழ்வாராய்ச்சி என்பது உரு பொருத்தமான திட்டமா என்பது பற்றி அரசாங்கம் மக்களுடன் கலந்துரையாடியதா? இதன்விளைவாக ஏற்படப்போகும் சமூக வாழ்வாதாரங்கள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கான சேதத்தை அரசாங்கம் மதிப்பிட்டதா? என காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவு கேள்வி எழுப்பியுள்ளது.

 இதுகுறித்து அக்கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

எமது நாட்டிலுள்ள கடல்கள் மற்றும் கடற்கரைகள் குறித்து இலங்கையர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். வர்க்க, வருமான வேறுபாடுகளைக் கடந்து எம்மில் பலர் கடற்கரைக்குச் செல்வதை விரும்புகிறோம். எம்மைப் பொறுத்தவரை, எமது நாட்டைச் சுற்றியுள்ள கடல் என்பது சகலரும் இலவசமாக அணுகக்ககூடிய ஒரு பொதுச்சொத்தாகும். எமது கடல்களும் கடற்கரைகளும் உள்நாட்டு மீனவர்கள், விவசாயிகள் முதல் அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் ஒரு முக்கிய துறையான சுற்றுலாத்துறை வரை வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பக்கூடிய பரந்துபட்ட சூழலியல் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இப்போது இந்த நிலை மாற்றமடையப்போகிறது.

எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருப்பதாக வெளியாகியிவரும் அறிக்கைகள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகிறோம். எமது கடற்கரைகள் பொதுப்பயன்பாட்டுக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ அன்றி, அகழ்வாராய்ச்சி நிறுவனங்கள் எமது வளங்களை சூறையாடுவதற்கும், மாசுபடுத்துவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. எமது கடல் மணலில் உள்ள கனிமங்கள் உறிஞ்சப்படும்.

இலங்கையின் கடல்களும் கடற்கரைகளும் கரைகளில் தமது கூடுகளைக் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திவரும் சில ஆமை இனங்கள் போன்ற அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்களின் வாழ்விடங்களாகவும் காணப்படுகின்றன. வனவிலங்குகளின் இந்த புலம்பெயர்வு முறைகளை நாம் தனித்துவமான சுற்றுலாத்துறை ஈர்ப்புக்குரிய விடயங்களாக பிரசாரம் செய்கிறோம். இருப்பினும் தற்போதைய இலாபவெறி இந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது.

எமது நாட்டில் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக ஏரிகள் மற்றும் கடலில் உள்ள மீன்பிடித்தளங்கள் உள்ளிட்ட கரையோர சுற்றுச்சூழல் கட்டமைப்புக்களையே பெரிதும் நம்பியுள்ளனர். அவை பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புக்களை வழங்குகின்றன. அவ்வாறிருக்கையில் கரையோரப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது கரையோர மீன்பிடித்தொழில் பாதிப்புக்குள்ளாகும். அதுமாத்திரமன்றி நிலத்தடி நீரை பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதிலும் தாக்கங்கள் ஏற்படும்.

எனவே இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கினால் எமது கடற்கரையை மீட்டெடுப்பதற்குக் குறைந்தபட்சம் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் தேவைப்படும். அதற்காக ஏற்படக்கூடிய செலவினங்களை அரசாங்கமும், மக்களும் ஏற்கவேண்டியிருக்கும். இருப்பினும் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் தனியார் நிறுவனங்கள் இந்த ‘மறுவாழ்வு’ செயன்முறைக்கு எவ்வகையிலும் பங்களிப்புச் செய்யாது.

இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் 17 ஆம் திகதி மினரல் டெக்னோலொஜி அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் இணைந்து கனிம மணல் தொழில்நுட்ப மாநாட்டை நடாத்துகிறது. ஆனால் இலங்கைக்கு அகழ்வாராய்ச்சி என்பது உரு பொருத்தமான திட்டமா என்பது பற்றி அரசாங்கம் மக்களுடன் கலந்துரையாடியதா? இதன்விளைவாக ஏற்படப்போகும் சமூக வாழ்வாதாரங்கள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கான சேதத்தை அரசாங்கம் மதிப்பிட்டதா? இதனால் ஏற்படக்கூடிய அந்நியச்செலாவணி இழப்பை அரசாங்கம் மதிப்பீடு செய்ததா?

Beaches & Islands

 

மீளமுடியாத சேதம் ஏற்படுத்துவதற்கு முன்பதாக நாம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும். எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை எமக்கு உண்டு என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.