கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளரின் கருத்து, கோட்டாபய ராஜபக்ஷவை போன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல் போனோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த வெளியிட்ட இந்த கருத்து தொடர்பாக தாம் கரிசனையடைவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

போரின்போது படையினரிடம் கையளித்த தமது உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உறவுகள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான பிரதிபலிப்பாக இலங்கை தமது உள்ளகப் பொறிமுறையை விளம்பரப்படுத்திவரும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக குறித்த ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.