தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம்

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் ‘நீதியின் ஓலம்’ எனும் தலைப்பில் எதிர்வரும் 14 – 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகள் சனிக்கிழமையுடன் (08) 100 நாட்களை எட்டியிருப்பதுடன், அந்த மனிதப்புதைகுழியில் இருந்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் குறிப்பாக படுகொலை செய்யப்பட்டு, செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுமே தாயகச் செயலணி அமைப்பு ‘நீதியின் ஓலம்’ எனும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தை ஏற்பாடு  செய்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 14 – 16 ஆம் திகதி வரை செம்மணி மனிதப்புதைகுழி அவலம் குறித்தும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு குறித்தும்  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், அதனைத்தொடர்ந்து 17 ஆம் திகதி செம்மணி மனிதப்புதைகுழிக்கு அண்மையில் கவனயீர்ப்புப்பேராட்டத்தை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.