தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருவது சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா? கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருவது

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருவது சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தேசிய  பாதுகாப்பு என நீங்கள் கருதுவது, சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா?. இங்கு நாடு என நீங்கள் கருதுவது, ஒரு இனத்தை  மட்டும் தான் குறிக்கிறதா? அல்லது இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் குறிக்கிற்தா?. அனைத்து இன குடிமக்களையும் உள்ளீர்த்து அவர்களுக்குமான பாதுகாப்பு என கருதினால், அது ஒரு போதும் பெரும்பான்மைவாத கருத்தியலில் இருந்து உருவாக முடியாது. உதாரணத்துக்கு இந்த அவையில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றை கேட்கிறார்கள் என்பதற்காக அது முழு நாட்டுக்கும் உரித்தானது என கருதவே முடியாது. துரதிர்ஷடவசமாக இங்கு இருக்கின்ற எதிர்க்கட்சியினரும் அதே எண்ணப்பாங்கிலேயே கருத்துரைத்திருக்கிறார்கள்.

இங்கு இந்த நாடு என கூறும் போது,  இங்கு பல்லின அடையாளங்களை வெளிப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எம்மை பொறுத்தவரை இந்த நாடு ஆகக்குறைந்தது இரு தேசங்களை கொண்ட பல்தேச நாடாகும். எனவே, ஒரு நாட்டின் கருத்து என வரும்போது, ஒவ்வொரு இனத்தினரினதும் எண்ணங்களும் எதிர்ப்பர்ப்புகளும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News