இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகள் குறித்து மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சஜீவ மெதவத்த கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, கைதிகள் சிலர் தப்பிச்செல்ல முயன்றதுடன் கட்டடங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

இதேவேளை இந்த மோதலில் 33 வயதுடைய கைதி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் தொடர்ந்தும் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.