வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் (14 வயது) உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற மாணவன் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டுக்குப் பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிபட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.
குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான இவருக்கு மூன்று அக்கா, அண்ணன் ஒருவர் என நான்கு சகோதர்கள் உள்ளனர்.
இவர்களது காணியில் வர்த்தக நிலையக் கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதியின்மையினால் குறித்த சிறுவனும் அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை என்று கூறப்படுகின்றது.
வழக்கம் போல் உறக்கத்துக்குச் சென்ற நிலையிலேயே இன்று (06.07.2021) காலை சிறுவனைக் காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.