வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (30) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை என்றும் சர்வதேச ரீதியிலான விசாரணையையும், காணாமல் போன உறவினர்களுடைய முடிவையும் வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு “நிதி தேவை இல்லை நீதியே தேவை“, “சர்வதேச தலையீடு தேவை“ என்ற கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போன தமது உறவினர்களுடைய படங்களை தாங்கி இருந்ததோடு பதாதைகளையும் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



