இலங்கையுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த மீண்டும் பேச்சுவார்த்தை

இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாகி ஆகியோர், இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான, உரையாடலை மீண்டும் ஆரம்பிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள, அதிகாரிகளுடன் தொழில்நுட்ப விவாதங்களைத் தொடர தாம் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடினமான இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியக் கொள்கைகளுக்கு இணங்க, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .