ரணிலை வேட்பாளராக களமிறக்க முடிவில்லை – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் வேட்பாளரையே களமிறக்குவோம். வெகுவிரைவில் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்று பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை பணிமனையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவில் உறுப்பினர்கள் எவரும் இல்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுவது அவரின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மட்டத்தில் உத்தியோகபூர்வ தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் பட்சத்தில் தனிப்பட்ட கருத்துகளை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கட்சியின் உள்ளக மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் விளங்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கும் இயலுமை எமக்கு உள்ளது. வேட்பாளரை அறிவிக்கக் காலம் உள்ளது. சிறந்ததை இறுதியில் அறிவிப்போம். வெற்றிபெறும் வேட்பாளரையே நாங்கள் களமிறக்குவோம் என்பதை பிரசன்ன ரணதுங்க நன்கு அறிவார்” என்றும் அவா் தெரிவித்தாா்.