செம்மணியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை சர்வதேசத்தின் கீழ் பாதுகாக்கக் கோரி பேரணி!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என்று கோரி தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (13) காலை நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமான பேரணி கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்ததுடன் அங்கு கூட்டமும் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுவதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்று கோரியே இந்த பேரணி நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், வட கிழக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு, இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.