மன்னார் எழுத்தூர் பகுதியில் அமைந்துள்ள பழைமையான குளத்தை தனியார் சிலர் அடாத்தாக வேலிகள் அடைத்து அபகரிப்பு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,“இந்த குளம் மிகவும் பழமையானது. இந்த குளத்தை நாங்கள் சிறுவயதில் குளிப்பதற்கும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தோம்.
மழை காலங்களில் வேறு இடங்களில் இருந்து வடிந்து வரும் நீர் இந்த குளத்தில் தேங்கி நிற்கும். இந்த குளம் இல்லாவிட்டால் அனைத்து நீரும் கிராமங்களுக்கு சென்று கிராமங்களை மூழ்கச் செய்யும். இந்த குளத்தை அடைத்து மேட்டு காணியாக மாற்றினால் மழைநீர் வழிந்தோடுவதற்கு இடமில்லை.
இந்தப் பகுதியில் குடியிருந்த மக்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு சாந்திபுரம் பகுதியில் காணி வழங்கப்பட்டிருந்தது. இந்த குளத்திற்கு கோரைக்குளம் அல்லது தாமரை குளம் என்றும் சொல்லுவது வழக்கம்.
மேலும் மன்னார் எழுத்தூர் பகுதியில் இருப்பதுதான் பலமீன் ஓடை சின்ன விளாங்காடு, பெரிய விளாங்காடு அப்பகுதியில் உள்ள ஒரு உறுதியை வைத்துக் கொண்டு இந்த குளத்தை தனிநபர்கள் அடாத்தாக வேலி அடைத்து வருகிறார்கள்.
குறித்த நபர்களோடு மென்மையான முறையில் பேசிய போதும் அவர்கள் ரவுடித்தனத்துடன் சண்டைக்கு வருகிறார்கள். அவர்களை எதிர்ப்பவர்களின் வீட்டு வேலிகள் மதில்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படுகிறது.
மழை காலத்தில் பொது மக்கள் இந்த குளத்தை பயன்படுத்தினாலும் கோடை காலங்களில் ஆடு மாடு கழுதைகள் பறவைகள் என குடிநீருக்கு குளத்தை பயன்படுத்துகிறன.
குளமானது அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்து மிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் இந்த குளம் இவ்விடத்தில் இருப்பதால்தான் மழை காலங்களில் கிராமங்கள் பாதுகாக்கப்படுகிறது.
பொது மக்களாகிய நாங்கள் அரசாங்கத்திற்கு முறைப்பாடு மட்டுமே செய்ய முடியும். நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு” என்றனர்.