பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின்போது மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாப்பது அவசியம் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தல்

மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு பயங்கரவாத செயற்பாட்டையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இருப்பினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின்போது மனித உரிமைகளைப் பாதுகாக்கவேண்டியது இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், சகல தரப்பினரதும் யோசனைகளுக்கு அமைவாக அவசியமானதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமிருந்தும் திருத்த யோசனைகள் கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே அதன் யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது.

மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகவும், அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ள அந்த இயக்கம், அதேவேளை பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின்போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டவகையில் அமைந்திருப்பதாக அந்த யோசனைகளில் சுட்டிக்காட்டியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கம், அவ்வரைவிலக்கணத்தையும் சந்தேகநபரொருவரைக் கைதுசெய்வதற்கும், தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரத்தை வழங்கக்கூடியவகையில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தையும் திருத்தியமைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான முயற்சிகளின்போது ‘பயங்கரவாதம்’ என்ற பதத்துக்கு ஜோர்ஜ் மிச்சேல் என்பவரால் முன்மொழியப்பட்ட வரைவிலக்கணத்தையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தமது யோசனைகளில் உள்ளடக்கியுள்ளது.

மேலும் பயங்கரவாத செயற்பாடாக வரையறுக்கப்படவேண்டிய குற்றங்கள், இச்சட்டத்தின்கீழ் சந்தேகநபரொருவரைக் கைதுசெய்யும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்பன தொடர்பிலும் சமூக நீதிக்கான இயக்கம் திருத்தங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.