இலங்கை: இரவு முழுக்க உறங்காமல் அரணாக நின்று மக்களை காத்த அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும்

நீங்க தூங்குங்க. நாங்க பார்த்துக்குறோம்..! இரவு முழுக்க தூங்காமல் அரணாக நின்று மக்களை காத்த அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும்.

கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.

இந்த போராட்டத்தை ஒரு மத மோதல் போல மாற்றலாம் என்று இலங்கை அரசு முயன்று வருவதாக அந்நாட்டு மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். இந்துக்கள் – இஸ்லாமியர்கள் – புத்தர்கள் – கிறிஸ்துவர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்தி மக்களை மோதலுக்கு உள்ளாக்கும் வகையிலும், போராட்டத்தை நிறுத்தும் வகையில் அரசு இப்படி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பல இடங்களில் இவர்களே கலவரத்தை ஏற்படுத்தி மக்கள் மத ரீதியாக அடித்துக்கொண்டதாக கிளப்பி விட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் நேற்று இலங்கை போராட்டத்தின் போது கோ கோட்ட காம பகுதியில் மக்கள் சாரை சாரையாக கூடி போராட்டம் செய்தனர். அப்போது அங்கு மத ரீதியாக மோதல் நடக்க கூடாது என்பதற்காக கிறிஸ்துவ பெண் கன்னியாஸ்திரிகள் கூடி அரணாக நின்று மக்களை காத்தனர். இரவு முழுக்க தூங்காமல் இவர்கள் கோட்ட கோ காம பகுதியிலேயே தங்கி மக்களை காத்தனர். இரவில் போராட்டம் நடக்கும் இடத்தில் கலவரக்காரர்கள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அங்கு கலவரம் எதுவும் நடக்காத வகையில் கன்னியாஸ்திரிகள் கூடி நின்று இரவு முழுக்க பாதுகாப்பு அளித்தனர் ர். கன்னியாஸ்திரிகளின் இந்த செயல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்க தூங்குங்க.நாங்க பார்த்துக்குறோம் என்று கூறி அவர்கள் அங்கேயே இரவு முழுக்க தங்கி இருந்தனர்.

அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் தங்கள் உடையில், இரவு முழுக்க அமர்ந்தபடி மக்களை காத்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அங்கு போராட்டகாரர்கள் மீது அரசு இரவில் துப்பாக்கி சூடு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் கன்னியாஸ்திரிகள் தங்களை சுட்டாலும் பரவாயில்லை தைரியமாக மக்களுக்காக அரணாக நின்றனர்.

மத ஒற்றுமையின் அடையாளமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இலங்கை அரசு இந்த விவகாரத்தை மத மோதலாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையில் முந்தைய ஆண்டுகளில் பல முறை மத மற்றும் இன ரீதியான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை மத, இன ரீதியான மோதல்களுக்கு எல்லாம் மக்கள் இடம் கொடுக்கவில்லை. ராஜபக்சே ஆதரவாளர்கள் பரப்பும் வதந்திகளை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒன்றாக நின்று, அரசை கலைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

Tamil News