பௌத்த சிங்கள மயமாக்கலை ஆரம்பித்தது கோத்தாவின் விசேட செயலணி

காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக அம்பாறை – பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக நேற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணி அளவீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் சார்பாக 5 பேரை பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு வருமாறு பிரதேச செயலாளர் நேற்று முன்தினம் (18) அறிவித்திருந்தார்.

இதன்போது, பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் நேற்று காணி அளவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.

முன்னராக, தொல்பொருள் இடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அம்பா றை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் கடற்கரையில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் கடற்படைத் தளத்தை அமைக்குமாறு கடற்படைத் தளபதியிடம் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உத்தரவிட்டிருந்தார் .

இ ந்த அறிவிப்பை உடனடியாக நிறுத்துமாறும் வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக வெகுஜன அமைப்புகள் தலையிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நில உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி (PARL) பலத்தைப் பயன்படுத்துவது மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைக்கு கவலை தெரிவித்திருந்தது.

அம்பாறையில் உள்ள பொத்துவில் முகுது மஹா விகாரையில் பொதுமக்கள் நில நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டிற்கான வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், தொல்பொருள் உரிமைகளை விஞ்ஞான ரீதியாக நியாயப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், இந்த நிலத்தை ஒரு தொல்பொருள் தளமாக சட்டபூர்வமாக கையகப்படுத்தும் முயற்சிகள் குறித்த அறிக்கைக்கு மக்கள் கூட்டணி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தது.

“நாட்டில் தொல்பொருள் மற்றும் வரலாற்று சிறப்புள்ள ஒரு சில இடங்களை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு பரந்த மற்றும் முன்னோடியில்லாத வகையில் நிலம் அபகரிக்கப்படுகின்றது” எனவும் அது சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா அரசுத் தலைவர் கோதாவினால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி தனது பௌத்த சிங்கள மயமாக்கலை பொத்துவிலில் ஆரம்பித்துள்ளது.