இம்மாத இறுதிக்குள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், தவறினால், ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடக்கும் – சிவாஜிலிங்கம் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்.அதை செய்யத் தவறின், ஜனாதிபதி செல்லும்  இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம்  எச்சரித்துள்ளார்.

வேலன் சுவாமி கைது மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த அவர், வேலன் சுவாமியை கைதுசெய்தமை காட்டுமிராண்டித்தனம். இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தமிழ்  அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.  அவ்வாறு விடுதலை செய்யத் தவறின், ஜனாதிபதிக்கு எதிராக அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம்.

எங்களை எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யலாம். அதற்காக நாங்கள் அஞ்சப் போவதில்லை. எத்தகைய தடைகள் வந்தாலும், நாங்கள் அவற்றை தகர்த்து, எமது மக்களுக்காக எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ச்சியாக நாங்கள் நடத்துவோம்” என்றார்.