291 Views
அரச தரிசு நிலங்கள் இருக்கும் போது, விவசாய நிலத்தை கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை (ஜனாஸா) அடக்கம் செய்ய ஒதுக்கியது அரசியல் தலைவர்களின் ஒரு சூழ்ச்சியே என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் குற்றம்சுமத்தியுள்ளார்.
கொரோனாவினால் உயிரிழக்கும் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக கிண்ணியா வட்டமடுவில் காணி ஒதுக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “விவசாயிகளின் நிலங்களை இவ்வாறு அடக்கஸ்தளத்துக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது பொருத்தமான இடமல்ல. சுமார் முப்பது வருட காலமாக விவசாய செய்கையில் ஈடுபடுகிறார்கள். அருகாமையில் உள்ள குளத்தை நம்பி விவசாய செய்கை பண்ணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பிரதேச செயலாளரும் இணைந்து செயற்படுவது அரசியல் சூழ்ச்சியாகும். அடக்கஸ் தளங்களுக்கு இடம் தேவை தான். ஆனாலும் மக்கள் காணிகளை கையகப்படுத்தக்கூடாது .எவ்வளோ தரிசு நிலங்கள் இருந்த போதிலும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து காணியை கையகப்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும்” என்றார்.