பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான, ஆவணங்கள் மற்றும் சத்தியக் கடதாசியில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாக சங்கீதன் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி, உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் எழுச்சிப் பாடலை, அண்மையில் நிகழ்வொன்றில் பாடியதாக தெரிவித்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பாடலை பாடியதன் மூலம், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



