உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ரணில் – ராஜபக்ஷ அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் – வே. இராதாகிருஷ்ணன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஊடாக ரணில் – ராஜபக்ஷ அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மலையக மக்கள் முன்னணியின்  தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அறிவித்துள்ளன.

இரு கட்சிகளுக்கும் இடையிலான இணைவு என்பது புதிய விடயமல்ல. இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விடயமாகும். இந்த இணைவுக்காகவே ராஜபக்ஷக்கள் ரணிலை ஜனாதிபதியாக்கினர்.

எனவே, இந்த ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஊடாக மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள்.

‘வரும்; ஆனா வராது…’ என்ற நிலையிலேயே தேர்தல் உள்ளது. ஏனெனில், தேர்தலை ஒத்திவைப்பதற்காக பல வழிகளிலும் ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

எது, எப்படி இருந்தாலும், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதே நிலைப்பாட்டில்தான் தேர்தல் ஆணைக்குழுவும் உள்ளது.

நீதிமன்றத்தில் சில மனுக்கள் உள்ளன. எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்.

உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும். அடுத்த வாரம் எமது பட்டியல் கையளிக்கப்படும்.

75 சதவீத இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் – என்றார்.