எங்களை தமிழக முதலமைச்சர் தான் காப்பாற்ற வேண்டும் -தமிழகம் சென்ற அகதிகள் கண்ணீர்

தமிழக முதலமைச்சர் தான் காப்பாற்ற வேண்டும்

தமிழக முதலமைச்சர் தான் காப்பாற்ற வேண்டும்

இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு புலம்பெயர்பவர்களில் அதிகமானோர் தமிழகத்தில் தஞ்சம் கோரியுள்ளனர்.

அதன்படி இலங்கையிலிருந்து ஏற்கெனவே தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு வந்த 20 பேர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்குள் அகதிகளாக நுழைவதை தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்துக்குள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக நுழைய‌ முயன்றவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு ஃபைபர் படகில் திருகோணமலையைச் சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கியுள்ளனர். தகவலறிந்து இராமேஸ்வரம் மரைன்  காவல்துறையினர், கடலோரக் காவல்படை காவல்துறையினரின் ஹோவர் கிராப்ட் படகின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று அகதிகளை மீட்டு தனுஷ்கோடிக்கு கொண்டு வந்தனர்.

அப்போது கைக்குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாக வந்த இலங்கை அகதிகளைப் பார்த்த அங்கிருந்த வியாபாரிகள், தங்கள் கடைகளில் இருந்த உணவுப் பண்டங்களை கொண்டுவந்து கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது காவல்துறையினரிடம் “இலங்கையில் உணவுக்கே வழியின்றி பட்டினியாக கிடக்கிறோம். அங்குள்ள விலைவாசி உயர்வு மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது. எப்படியாவது எங்கள் பிள்ளைகள் உயிரையாவது காப்பாற்றியாக வேண்டும் என நகை பொருள்களை விற்று 2 இலட்சம் செலவு செய்து உயிரை பணையம் வைத்து இங்கு வந்துள்ளோம்.

எங்கள் நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்து நாட்டை சீரழித்து விட்டனர். அதிலிருந்து எங்கள் நாடு மீள்வதற்கு வழியே இல்லை. அரசியல்வாதிகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தப்பிஓட முடிவு செய்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல காத்துக் கிடக்கின்றனர். எங்களை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும். எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் அண்ணா…” எனக் கண்ணீர்த் ததும்ப கதறியபடி கூறியுள்ளனர்.

நன்றி- விகடன் Tamil News