தாய்லாந்து போர் கப்பல் மூழ்கியதில் கடற்படை வீரர்கள் காணாமல்போயுள்ளதாக தகவல்

தாய்லாந்து வளைகுடாவில் 100க்கும் அதிகமான கடற்படை வீரர்களுடன் சென்ற தாய்லாந்து போர் கப்பல் ஒன்று மூழ்கியதில் 31 பேர் காணாமல்போயுள்ளனர்.

மின் கட்டுப்பாட்டகத்தில் நீர் நிரம்பியதை அடுத்தே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தப் போர் கப்பல் மூழ்கியுள்ளது. 75 பேர் மீட்கப்பட்ட நிலையில் கொந்தளிப்பான கடலில் தொடர்ந்தும் 31 பேர் காணாமல்போயிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“12 மணி நேரம் கடந்த நிலையிலும் நாம் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளோம்” என்று கடற்படை பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார்.

உயிர் தப்பியோரை தேடும் மீட்பு நடவடிக்கை ஞாயிறு இரவு முழுவதும் நீடித்த நிலையில் நேற்று திங்கட்கிழமையும் அது தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.