நாடளாவிய ரீதியில் 15 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் – இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக சம்பள பிரச்சினை, உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பவை 08 ஆம் திகதி புதன்கிழமை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்திருந்தன.

இதன் போது பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான கொடுப்பனவை 3000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சகல ஆசிரியர் சங்கங்களும் 15ஆம் திகதி அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்தால் , பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும். எனவே இன்றைய தினத்திற்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.