கொரோனா சமூகப்பரவல் குறித்து  தகவல் வெளியிட்ட மருத்துவர் பதவி நீக்கம்

இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜயருவான் பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் உத்தரவின் பேரில் இடம்பெறவில்லை என  செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ள மருத்துவர் ஜயருவான் பண்டார தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில், கடந்த சிலமாதங்களாக கோவிட் 19 சமூகத்தினுள் காணப்பட்டது என தெரிவித்திருந்தார்.

ஜனவரி முதல் இந்த வைரஸ் எப்படியோ சமூகத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சமூகத்திற்குள் ஏற்கனவே நோயாளிகள் இருந்திருக்காவிட்டால் புதிய நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சூழ்நிலையேற்பட்டிருக்காது எனவும் மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.